உலகம்

கால் எரிச்சல்.. குளிக்கக்கூட முடியவில்லை.. அரிய வகை நோயுடன் அவதிப்படும் ஆஸ்திரேலிய சிறுமி

Published On 2023-07-11 11:43 GMT   |   Update On 2023-07-11 11:43 GMT
  • மருத்துவ உலகில் இது மனிதகுலம் அறிந்த மிகவும் வேதனையான நிலை என்று கூறப்படுகிறது.
  • சிகிச்சை பெற தேவையான பணத்திற்காக கோஃபண்ட்மீ வலைத்தளம் மூலம் முயற்சி செய்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் பெல்லா மேசி (Bella Macey) எனும் 10 வயது சிறுமிக்கு உலகிலேயே அரிய வகை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிறுமியின் வலது காலை தாக்கியுள்ள இந்த நோயால், அவர் நகரும் போதும், அந்த காலை தொடும்போதும் அவரது கால் முழுவதிலும் கடுமையான வலி ஏற்படுகிறது.

அவர் குடும்பம், பிஜி நாட்டிற்கு விடுமுறைக்கு சென்றிருந்த போது அந்த சிறுமியின் வலது காலில் ஒரு கொப்புளம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு நரம்பியல் தொடர்பான சிக்கலான பிராந்திய வலி நோய்க்குறி (CRPS) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மருத்துவ உலகில் இது மனிதகுலம் அறிந்த மிகவும் வேதனையான நிலை என்றும் தீவிர வலியை ஏற்படுத்தும் அரிய நோய் என்றும் கூறப்படுகிறது.

பெல்லாவின் உடலில் இந்த வலி உணரப்படும் இடங்கள் குறித்து அவர் கூறும்போது, "கால் பயங்கரமாக எரிகிறது. என்னால் குளிக்க முடியாது. என்னால் காலில் எந்த இடத்தையும் தொடக்கூட முடியாது" என்கிறார்.

பள்ளிக்கு செல்வது, விளையாடுவது போன்ற குழந்தைகளுக்கான செயல்கள் மட்டுமின்றி பேண்ட் அணிவது போன்ற அன்றாட நடவடிக்கைகள் கூட அவரால் செய்ய முடியாது.

ஆஸ்திரேலியாவில் உரிய மருத்துவ நிவாரணம் கிடைக்காததால், பெல்லாவும் அவரது தாயும் அரிசோனாவில் உள்ள ஸ்பெரோ கிளினிக்கில் மருத்துவ ஆலோசனை பெற்று, அதன்படி சிகிச்சை பெற தேவையான பணத்திற்காக கோஃபண்ட்மீ வலைத்தளம் மூலம் முயற்சி செய்து வருகின்றனர்.

"இந்த சிறுமி தனது அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கும் ஒரு நோயினால், தனது குழந்தை பருவ மகிழ்ச்சியை இழந்து கொடூரமான வலியுடன் போராடி வருகிறார். அவரது வலது கால் மற்றும் இடுப்பு பகுதி வரை இயக்கம் நின்று விட்டது. அவள் இப்போது பெரும்பாலும் படுக்கையில்தான் இருக்கிறார். வீட்டிற்கு உள்ளே சுற்றி வர வேண்டும் என்றால்கூட சக்கர நாற்காலி தயவில்தான் செய்ய முடிகிறது," என்று கோஃபண்டுமீ (GoFundMe) சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Tags:    

Similar News