செய்திகள்
பழைய சம்பவத்தை சுட்டிக் காட்டி ஃபேஸ்புக் மீது புதிய வழக்குப் பதிவு
ஃபேஸ்புக் நிறுவனம் கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்திற்கு தனிப்பட்ட முறையில் பயனர் விவரங்களை வழங்கிய விவகாரத்தில், அந்நிறுவனம் மீது புதிதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. #Facebook
அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் டொனால்டு டிரம்பிற்காக, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற நிறுவனம் ஃபேஸ்புக் நிறுவனத்தின் 5 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்களை திரட்டி, தவறாக பயன்படுத்தியது என குற்றச்சாட்டு எழுந்த விவகாரம் உலகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக சர்வதேச அளவில் விமர்சனம் எழுந்த நிலையில், ஃபேஸ்புக் நிறுவனர் சூக்கர்பர்க் நடந்த விவகாரத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதுடன், இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என உறுதி அளித்தார்.
இந்திய அரசியலிலும் இப்பிரச்சனை புயலை ஏற்படுத்தியது. சர்வதேச அளவில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இந்த விவகாரம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் பேஸ்புக் நிறுவனத்திற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பயனர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பகிர்ந்து கொண்டதற்காக அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட அட்டார்னி ஜெனரல் கால் ரேசின் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கின் மூலம் ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர் விவரங்களை அதிக கவனமாக கையாளும் என்பதை உறுதிப்படுத்த முடியும் என தான் நம்புவதாக ரேசின் தெரிவித்தார்.
இதுகுறித்து ஃபேஸ்புக் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பயனர் விவரங்களின் பாதுகாப்பு குறித்து வழக்கு தொடுத்திருக்கும் அட்டார்னி ஜெனரல் கால் ரேசின் மற்றும் பல அட்டார்னி ஜெனரல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அவர்களது குற்றச்சாட்டுகளை பரிசீலனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.