யார் அந்த சார்?.. எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் பதாகைகளை கையில் ஏந்தி அதிமுகவினர் போராட்டம்
- ஞானசேகரன் அந்த மாணவியை பலாத்காரம் செய்யும் போது சார் என்று அழைத்து யாரிடமோ பேசியது தெரிய வந்தது.
- ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோட்டூர் புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் அந்த நபர் பாலியல் பலாத்காரத்தை தனது செல்போனில் படம் பிடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே ஞானசேகரன் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யும் போது சார் என்று அழைத்து யாரிடமோ பேசியது தெரிய வந்துள்ளது.
எனவே ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளன. யார் அந்த சார் என்ற வாசகம் சமூக வலை தளங்களில் வைரலானது.
இந்நிலையில் சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் 'யார் அந்த சார்?' என்ற பதாகைகளை கையில் ஏந்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.