குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் விஜய் பேசுகிறார்- அனுமதி கேட்டு கட்சி நிர்வாகிகள் போலீசில் மனு
- குமரி மாவட்டத்திற்கு அடுத்தமாதம் 11-ந் தேதி விஜய் வருகை தர உள்ளார்.
- விஜய் பேசுவதற்கான இடத்திற்கு அனுமதி கேட்டு போலீசில் மனு அளித்துள்ளனர்.
நாகர்கோவில்:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். இதையடுத்து தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
அவர் தனது சுற்றுப்பயணத்தை கடந்த 13-ந்தேதி திருச்சியில் தொடங்கினார். அங்கு விஜய்யின் சுற்றுப் பயணத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பிரசாரத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு அவர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அது மட்டுமின்றி முதல் நாள் பிரசாரத்தின்போது திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்திலும் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இரவு நேரமாகி விட்டதால் பெரம்பலூர் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அந்த மாவட்டத்திற்கு பிரசாரம் செய்ய செல்வதாக விஜய் தெரிவித்துள்ளார்.
சுற்றுப்பயணத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒவ்வொரு பகுதியிலும் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு நாளைக்கு 2 மாவட்டங்களில் மட்டும் பிரசாரம் செய்வதென்று விஜய் முடிவு செய்துள்ளார். இதையடுத்து அவரது சுற்றுப்பயணத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
குமரி மாவட்டத்திற்கு அடுத்தமாதம் (அக்டோபர்) 11-ந் தேதி விஜய் வருகை தர உள்ளார். அன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வருகை தரும் விஜய், சென்னையில் இருந்து விமானம் மூலமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு வருகிறார். பின்பு அங்கிருந்து கார் மூலமாக குமரி மாவட்டத்திற்கு விஜய் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லை பகுதியில் கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
குமரி மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட குழித்துறை சந்திப்பு, மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட அழகிய மண்டபம் சந்திப்பு பகுதிகளில் விஜய் பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் நாகர்கோவில் மாநகர பகுதியில் விஜய் பேசுவதற்கான இடத்திற்கு அனுமதி கேட்டு போலீசில் மனு அளித்துள்ளனர்.
டெரிக் சந்திப்பு, செட்டி குளம் சந்திப்பு, வடசேரி சந்திப்பு, நாகராஜா கோவில் திடல் பகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் விஜய் தனது சுற்றுப்பயணத்தின்போது 3 இடங்களில் பேசுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
போலீசார் எந்த இடத்தில் பிரசாரம் செய்வதற்கு அனுமதி வழங்குகிறார்களோ அந்த இடத்தில் விஜய் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். விஜய்யின் வருகை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளுக்கும், அவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை தந்துள்ளது.