தமிழ்நாடு செய்திகள்

கேரள வனத்துறையின் தொடர் பிடிவாதம்- பெரியாறு அணை பராமரிப்பு பணிக்கு சென்ற தமிழக வாகனங்கள் திரும்பியது

Published On 2024-12-10 09:33 IST   |   Update On 2024-12-10 09:33:00 IST
  • கடந்த 5 நாட்களாக அந்த வாகனங்கள் சோதனைச்சாவடியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன.
  • தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தியும், அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை.

கூடலூர்:

முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த 4-ந் தேதி தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் 2 லாரிகளில் தளவாடப்பொருட்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் வல்லக்கடவு வழியாக சென்றனர்.

அப்போது அங்குள்ள வனசோதனைச்சாவடியில் கேரள பெரியாறு புலிகள் காப்பக அதிகாரிகள் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினர். இது குறித்து கேரள நீர் பாசனத்துறை அதிகாரிகளுக்கும், இடுக்கி மாவட்ட கலெக்டருக்கும் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றுள்ளதாக கூறிய போதிலும் அந்த கடிதம் தங்களுக்கு வரவில்லை எனவும், வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது எனவும் கூறினர்.

இதனால் கடந்த 5 நாட்களாக அந்த வாகனங்கள் சோதனைச்சாவடியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன. இச்சம்பவத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் லோயர் கேம்ப் பகுதியில் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகளை சமாதானப்படுத்திய அதிகாரிகள் விரைவில் வாகனங்களை உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

ஆனால் 5 நாட்களாக அனுமதி கிடைக்காமல் தமிழக வாகனங்கள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன. மைனர் இரிகேஷன் டிபார்ட்மெண்ட் அனுமதி கடிதம் தங்களுக்கு கிடைத்தால் மட்டுமே தமிழக வாகனங்களை அனுப்ப முடியும் என்று கேரள வனத்துறையினர் பிடிவாதமாக உள்ளனர்.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவிக்கையில், தமிழகத்துக்கு எந்தவித நன்மையும் தராத கேரள அரசால் உருவாக்கப்பட்ட மைனர் இரிகேஷன் டிபார்ட்மெண்ட் என்ற அமைப்பை தடை செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் அனுமதியின்படி அணை பராமரிப்புக்கு அனுமதி அளிக்காவிட்டால் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என தெரிவித்தார். ஆனால் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தியும், அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை.

வல்லக்கடவு சோதனைச்சாவடியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு லாரியின் டயர் வெடித்தது. இதனால் அதன் டிரைவர் லாரியில் இருந்த தளவாடப்பொருட்களை சாலையிலேயே கொட்டி விட்டு திரும்பினார். அதன் பின் மற்றொரு டிரைவரும் எம்சாண்ட் மணல் உள்ளிட்ட பொருட்களை சோதனைச்சாவடியில் இருந்து 100 மீட்டர் முன்பாக சாலையோரம் கொட்டி விட்டு வேதனையுடன் திரும்பி வந்தார்.

இது குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கையில், முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு விஷயத்தில் தமிழக அரசு எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் மவுனமாக உள்ளது. இதனால் அணை பராமரிப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு முல்லைப்பெரியாறு அணை பலவீனமடைந்ததாக கேரளா வாதத்தை வைக்க முடிவு செய்துள்ளது. தமிழக முதலமைச்சர் இந்த வாரம் கேரள மாநிலம் செல்ல உள்ள நிலையில் அங்குள்ள அதிகாரிகளிடம் இது குறித்து இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News