எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
- செங்கல்பட்டில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
- சென்டிரலில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் நெல்லை-எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லையில் இருந்து இன்று (புதன்கிழமை) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06166), மறுநாள் காலை 10.55 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து நாளை (வியாழக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் சிறப்பு ரெயில் (06165) மறுநாள் நள்ளிரவு 12.05 மணிக்கு நெல்லை வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில்,
பயணிகள் முன்பதிவு மிக குறைவாக இருப்பதால் வருகிற 24 மற்றும் 26-ந் தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
இதே தேதியில் நெல்லையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில், 28-ந்தேதி நாகர்கோவிலில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில், 29-ந்தேதி அதிகாலை 4.15 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று (புதன்கிழமை) மதியம் 3.10 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து கோட்டயம் வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில், நாளை (வியாழக்கிழமை) கோட்டயத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு சென்னை சென்டிரல் வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயிலும் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.