சிவகாசி வெடி விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
- பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
- விபத்தில் படுகாயமைடைந்த மூன்று பேரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ளஆண்டியபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. நிகழ்விடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர்.
மேலும், விபத்தில் படுகாயமைடைந்த மூன்று பேரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிவகாசி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், நாரணாபுரம் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (21.07.2025) பிற்பகல் சுமார் 3.50 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் கீழத்திருத்தங்கல், முத்துராமலிங்கம் காலனியைச் சேர்ந்த திரு.கார்த்திக் (வயது 23) த/பெ.தங்கராஜ் மற்றும் இரண்டு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகலட்சுமி (வயது 55), மாரியம்மாள் (வயது 53), மற்றும் மாரியம்மாள் (வயது 50) ஆகிய மூன்று நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.