தமிழ்நாடு செய்திகள்

சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

Published On 2025-05-18 08:03 IST   |   Update On 2025-05-18 08:39:00 IST
  • மீரான்குளம் சிந்தாமணி சாலையில் 8 நபர்களுடன் சென்றுகொண்டிருந்த கார் நிலை தடுமாறி சாலையின் அருகில் இருந்த கிணற்றில் விழுந்தது.
  • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சாத்தான்குளம் அருகே சாலையோர கிணற்றுக்குள் கார் பாய்ந்த கோர விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பலியானார்கள்.

விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம்-2 கிராமத்தில் இன்று நேற்று மாலை கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர் வட்டம், வெள்ளாளன் விளை, மீரான்குளம் சிந்தாமணி சாலையில் 8 நபர்களுடன் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று நிலை தடுமாறி சாலையின் அருகில் இருந்த கிணற்றில் எதிர்பாராதவிதமாக விழுந்ததில் 5 நபர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News