தமிழ்நாடு செய்திகள்

தூய்மை பணியாளர்கள் போராட்டம்- சென்னை மாநகராட்சி முன்பு போலீசார் குவிப்பு

Published On 2025-11-08 09:19 IST   |   Update On 2025-11-08 09:19:00 IST
  • அமைச்சர்கள், மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
  • மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சியின் 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியார்மயமாக்குவதை கண்டித்தும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 90 நாட்களுக்கு மேலாக ரிப்பன் மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கெனவே அமைச்சர்கள், மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.

தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல் துறையினரால் கடந்த ஆகஸ்ட் 13-ந்தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து சென்னையில் அவ்வப்போது வெவ்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். பின்னர் அவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுவார்கள்.

கடந்த 5-ந்தேதி மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடல் அலையில் இறங்கி கையில் பதாகைகளை ஏந்தி ஆபத்தான வகையில் தங்களுடைய போராட்டத்தை நடத்தினர்.

இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் 100-வது நாளை எட்டியுள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News