தமிழ்நாடு செய்திகள்

வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பணி தீவிரம்

Published On 2025-06-07 11:45 IST   |   Update On 2025-06-07 11:45:00 IST
  • உப்பு உற்பத்தியில் ஆண், பெண் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
  • தற்போது ஒரு டன் உப்பு ரூ.2000 முதல் ரூ.2500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வேதாரண்யம்:

தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் நாகை மாவட்டம் வேதாரண்யம் 2-ம் இடம் வகிக்கிறது.

இங்கு அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் நாள்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இங்கு உப்பு உற்பத்தி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உப்பு உற்பத்தியில் ஆண், பெண் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் போதுமான உப்பு இருப்பு வைக்க முடியவில்லை.

தற்போது உற்பத்தி செய்யப்படும் உப்பை தினமும் விற்பனைக்காக லாரிகள் மூலம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.

தற்போது ஒரு டன் உப்பு ரூ.2000 முதல் ரூ.2500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது வெயிலின் தாக்கத்தால் தீவிரமாக உப்பு உற்பத்தி நடந்தாலும் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி இலக்கை எட்டுவது கடினம் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News