2026-ல் வெற்றி பெறாவிட்டால் அ.தி.மு.க.வை யாராலும் காப்பாற்ற முடியாது- சைதை துரைசாமி
- சுயநலவாதிகளுக்கு என் கருத்து இடையூறாக இருக்கிறது என்றால், இருந்துவிட்டு போகட்டும்.
- அ.தி.மு.க.வின் தலைவர்களை ஒருங்கிணைத்தால் கட்சி பலம் பெறும்.
சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி சமீபத்தில், 'பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. பலமான கூட்டணி அமைத்து தி.மு.க.வை வீழ்த்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கருத்துகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
அந்த அறிக்கை தொடர்பாக அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, 'வேலைவெட்டி இல்லாமல், எங்கோ அமர்ந்துகொண்டு, யாரையோ திருப்திப்படுத்த சைதை துரைசாமி கருத்துகளை கூறி வருகிறார்' என்று கடுமையாக பேசி இருந்தார்.
அவருடைய இந்த பேச்சுக்கு சைதை துரைசாமி பதில் அளிக்கும் வகையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் முதலில் தன்னை பற்றி எம்.ஜி.ஆர். பேசிய வீடியோவை காண்பித்தார்.
எம்.ஜி.ஆர். அந்த வீடியோவில், "சைதாப்பேட்டை என்றாலே எனக்கு எலுமிச்சை பழம்தான் நினைவுக்கு வரும். எலுமிச்சை பழத்தை மாலையாக போட்ட சைதை துரைசாமியைத்தான் எனக்கு ஞாபகம் வருமே தவிர, பிறகுதான் இந்த நிகழ்ச்சியே ஞாபகம் வரும். நான் ஒரு அரசியல்வாதி. என் அரசியல் கட்சியில் இருந்த சைதை துரைசாமி அப்போதிருந்த முதலமைச்சருக்கு இந்த சைதாப்பேட்டையிலே துணிச்சலாக எலுமிச்சம்பழ மாலையை போட்டார். ஆனால் அந்த மேடையிலேயே அடித்து தூளாக ஆக்கி சைதை துரைசாமியை தூக்கி கொண்டுபோய் சிறைச்சாலையில் போட்ட அனுபவம்தான் என் கண்முன்னே நிற்கும்'' என பேசியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து ஜெயலலிதா அவரை பற்றி பேசிய வீடியோவை காண்பித்தார். அதில், 'மனிதாபிமானத்தின் மணிமகுடம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.. அந்த மகத்தான தலைவரின் கனவுகளை நனவாக்கி வரும் சிறந்த மக்கள் நலத் தொண்டனும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சைதை துரைசாமி உருவாக்கி இருக்கும் அறக்கட்டளையையும், அதன் கீழ் இயங்கும் இந்த இலவச திருமண மண்டபத்தின் சிறப்பையும் பார்க்கும்போது, சாதி, பேதம் பாராமல் எல்லா மக்களுக்கும் பயன்படும் சிறந்த பணிகளை ஆற்ற பிறந்தவர்கள் அ.தி.மு.க. உடன்பிறப்புகள்தான் என்பது உறுதிப்படுகிறது. கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் பயன்படும் ஒரு சீரிய பணி இது. கிஞ்சித்தும் லாப நோக்கம் இல்லாமல், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு எனும் மனப்பாங்கோடு இந்த இலவச திருமண மண்டபத்தை உருவாக்கியிருக்கும் சைதை துரைசாமியை மனம் மாற பாராட்டுகிறேன். ஆகவே இந்த நேரத்தில் நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம், நிச்சயமாக எனக்கு சைதை துரைசாமி மீது முழு நம்பிக்கை உண்டு' என்று பேசி இருந்தார்.
இந்த வீடியோக்களை காண்பித்த பிறகு சைதை துரைசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்னுடைய தியாகம், நேர்மை, அறம் சார்ந்த வாழ்வு, சேவை நிறைந்த செயலை பாராட்டியுள்ளனர். ஆனால் ஒருவர் என்னை வேலைவெட்டி இல்லாதவன் என்று சொல்லி இருக்கிறார். சேவை பற்றி உணராத இப்படிப்பட்ட மனிதர்கள் பொதுவாழ்க்கையில் இருக்கிறார்கள் என நினைத்து அவர்களை பொதுமக்கள் மத்தியில் தோலுரிக்கத்தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு.
அ.தி.மு.க. நல்ல முறையில் இருக்க வேண்டும். வெற்றி பாதையில் செல்ல வேண்டும். கருத்துகளை ஏற்றுக்கொள்ள விருப்பம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள். சுயநலவாதிகளுக்கு என் கருத்து இடையூறாக இருக்கிறது என்றால், இருந்துவிட்டு போகட்டும். அ.தி.மு.க.வுக்கு விதை போட்டவன், முதல் தியாகி என்னை பார்த்து வேலைவெட்டி இல்லாதவன் என்று சொல்வதா?.
2021-ல் சட்டமன்ற தேர்தலின்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது போல, பாராளுமன்ற தேர்தலிலும் தொடர்ந்திருந்தால் தமிழ்நாட்டில் 26 இடங்களுக்கு மேல் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றிருக்கும். 2 மத்திய மந்திரிகள் கிடைத்திருப்பார்கள். மேலும் மத்தியில் அதிகார மையத்தில் இருக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால், இங்குள்ள மாநில அதிகார மையத்திடம் இருந்து அவர்கள் நம்மை காப்பாற்றுவார்கள்.
அ.தி.மு.க.வின் தலைவர்களை ஒருங்கிணைத்தால் கட்சி பலம் பெறும். பிளவு என்ற சொல் இருக்கக்கூடாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அதுபோல் செய்து இருக்கிறார்கள். அவர்களே செய்தபோது, இவர்களால் முடியாதா?. எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் உள்துறை மந்திரி அமித்ஷாவை கூட்டணி விஷயமாக சந்தித்து இருந்தால், அதனை நான் வரவேற்கிறேன்.
வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற முடியாவிட்டால், இனி அ.தி.மு.க.வை யாராலும் காப்பாற்ற முடியாது. எம்.ஜி.ஆரை முதன்மைப்படுத்தினால் கட்சி வளரும். அவர்தான் சொத்து, மூலதனம். அ.தி.மு.க. ஆட்சியில் மீண்டும் அமர பா.ஜ.க.வுடன் கூட்டணியை உடனே அறிவிக்க வேண்டும். ஒற்றுமையுடன் இருந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.