காவல்துறையில் உள்ள களைகளை முதலமைச்சர் புடுங்கி எறிய தயங்குவது ஏன்? - ஆர்.பி.உதயகுமார்
- அ.தி.மு.க. ஆட்சியில் சிங்கம்போல இருந்த காவல்துறை இன்றைக்கு மக்கள் நம்பிக்கை இழந்து போய் விட்டது.
- நீங்கள் மன்னராட்சிக்கு மகுடம் சூட்ட களைகளை எடுக்க தயங்கிறீர்கள்.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நடைபெற்று வரும் ஸ்டாலின் தி.மு.க. ஆட்சியில் எங்கே போகிறது தமிழ்நாடு, இன்றைக்கு தாய் தமிழ்நாடு தலைகுனிந்து இருக்கிறது என்ற வேதனையில் தமிழக மக்கள் உள்ளார்கள்.
திருவண்ணாமலை சேர்ந்த காவலர்கள் இருவர் ஆந்திராவை சேர்ந்த இளம்பெண்ணை, பெற்ற தாயின் முன் பாலியல் சம்பவம் செய்திருப்பது இந்தியாவே பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. மக்களுக்கு காவல் அரணாக இருக்க வேண்டிய காவல்துறையை இன்றைக்கு பெண்களுக்கு எதிரான குற்றசெயலில் ஈடுபட்டுள்ளது.
காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு கூட பாலியல் துன்புறுத்தல் என்ற செய்தி வெளிவருவது மிகவும் வேதனைக்குரியது.
பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் காவல்துறை ஈடுபட்டால் இரட்டிப்பு தண்டனை வழங்கப்படும் என்று கடந்த 2025 சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் கொண்டு வந்த பின்பு இது போன்ற பெண்களுக்கு எதிரான அநீதிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சட்ட திருத்தத்திற்கு பின் அதை செயல்படுத்த அரசு தவறி விட்டதா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்?
அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவம் தொடர்ந்து தற்போது திருவண்ணாமலை சம்பவம் வரை பாலியல் சம்பவங்கள் நீண்டு கொண்டு தான் போகிறது. இன்றைக்கு குழந்தைகள், தாய்மார்கள், பெரியவர்கள் என அனைத்து பெண்களும் வீட்டில் மற்றும் பொதுவெளியில் செல்ல பாதுகாப்பை உறுதி செய்வதை அரசு தவறிவிட்டது.
இதுகுறித்து எடப்பாடியார் ஆதாரத்துடன் சட்டமன்றத்தில் பதிவு செய்தார், மக்கள் மன்றத்தின் பதிவு செய்தார், ஊடகங்களில் அறிக்கை வாயிலாக உரிமைக்குரல் எழுப்பி வருகிறார். ஆனால் அரசு இதை செவிடன் காதில் ஊதிய சங்கு போல அக்கறை கொள்ளவில்லை .
மக்களுக்கு பாதுகாப்பான அரணாக நிற்க வேண்டிய அரசு அதை உறுதி செய்ய வேண்டும். எடப்பாடியார் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கூறவில்லை மக்களுக்கு பாதுகாப்புடன் அரசு இருக்க வேண்டும் என்று தான் கூறுகிறார்.
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் காலங்களில் தமிழக காவல்துறை இங்கிலாந்து ஸ்காட்லாந்து நிகராக இருந்தது.
கருணாநிதி காவல்துறை ஈரல் கெட்டு விட்டது என்று கூறினார் அவர் சொன்ன வார்த்தை இன்றைக்கு அவரது மகன் ஸ்டாலின் ஆட்சியில் காவல்துறை ஈரல் கெட்டு தான் போய்விட்டது காவல்துறையில் களைகளை எடுக்க ஸ்டாலின் தயங்குவது ஏன்?
அ.தி.மு.க. ஆட்சியில் சிங்கம்போல இருந்த காவல்துறை இன்றைக்கு மக்கள் நம்பிக்கை இழந்து போய் விட்டது. மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வருவார் அப்போது நீங்கள் செய்ய தவறியதை சரி செய்து காவல்துறையில் களைகளை புடுங்கி எறிந்து காவல்துறைக்கு இழந்த பெருமையை மீட்டுத் தருவார்.
நீங்கள் மன்னராட்சிக்கு மகுடம் சூட்ட களைகளை எடுக்க தயங்கிறீர்கள், நிச்சயம் இந்த மன்னராட்சிக்கு முடிவு கட்டி 2026 இல் எடப்பாடியார் தலைமையில் மக்களாட்சி மலரும், அப்போது தமிழக காவல்துறை இங்கிலாந்து ஸ்காட்லாந்து நிகராக உயர்த்தி காட்டுவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.