தைலாபுரம் தோட்டத்தில் புதிய மாவட்ட செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை
- பா.ம.க.வில் 78 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் 61 புதிய மாவட்ட தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நியமித்துள்ளார்.
- டாக்டர் ராமதாசால் நீக்கப்பட்டவர்கள் அப்பொறுப்பில் தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து வருகிறார்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பா.ம.க.வில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார்.
பா.ம.க.வின் பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக சையத் மன்சூர் உசேன் நியமிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து வழக்கறிஞர் சமூக நீதி பேரவையின் தலைவராக இருந்த பாலு நீக்கப்பட்டு வக்கீல் கோபு நியமிக்கப்பட்டார்.
மேலும் பா.ம.க.வின் பொதுச்செயலாளராக இருந்த வடிவேல் ராவணன் நீக்கப்பட்டு முரளி சங்கர் நியமிக்கப்பட்டார்.
இதுவரை பா.ம.க.வில் 78 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் 61 புதிய மாவட்ட தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நியமித்துள்ளார்.
டாக்டர் ராமதாசால் நீக்கப்பட்டவர்கள் அப்பொறுப்பில் தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து வருகிறார். இதனால் தந்தை-மகன் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.
இந்த நிலையில் புதிய மாவட்ட செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் இன்று காலை முதலே தைலாபுரம் தோட்டத்திற்கு வரத் தொடங்கினார்கள். அவர்களுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட பொதுச்செயலாளர் முரளி சங்கர், சமூக நீதிப்பேரவை கோபு, பொருளாளர் சையத் மன்சூர் உசேன் ஆகியோரை புதிய மாவட்ட செயலாளர்கள், தலைவர்களுக்கு டாக்டர் ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.