தமிழ்நாடு செய்திகள்

ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்- ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை மூட வலியுறுத்தல்

Published On 2025-08-05 14:30 IST   |   Update On 2025-08-05 14:30:00 IST
  • ஆள் இல்லாத ரெயில்வே கேட் வழியாக 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு அத்தியாவசிய பணிகளுக்கு சென்று வருகின்றனர்.
  • ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை மூடி மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இலங்கியனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகில் விருத்தாச்சலத்தில் இருந்து சேலம் செல்லும் ரெயில் பாதை உள்ளது. இந்நிலையில் இலங்கியனூர் அருகே உள்ள ஆள் இல்லாத ரெயில்வே கேட் வழியாக 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு அத்தியாவசிய பணிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் அந்த பகுதியில் கேட் கீப்பர் இல்லாததால் ரெயில் வரும் நேரங்களில் மக்கள் அச்சத்துடன் சென்று வருவதாகவும், இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த ரெயில்வே கிராசிங்கில் கேட் கீப்பர் அமைத்து தர வேண்டும் அல்லது ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை மூடி மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேப்பூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் ரெயில்வே அதிகாரிகளும் வந்து பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News