மாமியாாின் ஜி.பே. மூலம் கைதிகளிடம் பணம் பெற்ற சிறை வார்டன்
- கைதிகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியில் சேலம் சிறை வார்டன் சுப்பிரமணியம் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
- மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கிய கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறை கைதிகள் மூலம் லட்டு, மிக்சர், பிஸ்கெட், பன் உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சிறை வளாகத்தில் வைத்து, கைதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சேலம்-ஏற்காடு மெயின் ரோட்டில் சிறை உள்ளதால், மெயின் ரோட்டோரம் சிறைக்கு சொந்தமான ஒரு அறையில் வைத்து பொதுமக்களுக்கும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. கைதிகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியில் சேலம் சிறை வார்டன் சுப்பிரமணியம் (வயது 34) என்பவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருட்களுக்குரிய பணத்தை சிறை கணக்கில் வரவு வைக்க வேண்டும். ஆனால் அந்த பணம் சிறை கணக்கிற்கு சரியாக வரவில்லை. இதனால் சுப்பிரமணியம் மீது சிறை நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கிய கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பொருட்கள் வாங்கியதற்கு 'ஜி.பே.' மூலம் பணம் அனுப்பி வருகிறோம் என்று கூறினர். இதையடுத்து அந்த 'ஜி.பே.' அக்கவுண்ட் யாருடையது என்று அவர்கள் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த செல்போன் எண் சிறை வார்டன் சுப்பிரமணியத்தின் மாமியாரின் செல்போன் எண் என்பது தெரிந்தது. அதன்படி கடந்த ஒரு ஆண்டாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் அவருடைய மாமியாரின் செல்போன் எண் மூலமாக 'ஜி.பே.' அக்கவுண்டுக்கு சென்றிருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து சிறை வார்டன் சுப்பிரமணியத்திடம் சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பணம் மோசடி செய்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து சேலம் சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத், சிறை வார்டன் சுப்பிரமணியத்தை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.