தமிழ்நாடு செய்திகள்

விபத்தில் உயிரிழந்த பிளஸ்-2 மாணவன் 443 மதிப்பெண்கள் பெற்று சாதனை

Published On 2025-05-08 13:20 IST   |   Update On 2025-05-08 13:20:00 IST
  • தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் குரூப் படித்து பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.
  • தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சுகுமார் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 21-ம் தேதி உயிரிழந்தார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டி ஊராட்சி ஒத்தையூரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் வேடசந்தூரில் கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார். இவரது மனைவி அமராவதி வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சத்துணவு ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு சுகுமார் என்ற மகனும் சுபாஷினி என்ற மகளும் உள்ளனர். சுபாஷினி மாரம்பாடியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

சுகுமார் (வயது 18) திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் குரூப் படித்து பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.

இந்தநிலையில் கடந்த மாதம் 6-ம்தேதி சுகுமார் இருசக்கர வாகனத்தில் வேடசந்தூர் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி விட்டு ஊருக்கு திரும்பும் போது, தட்டாரப்பட்டி பிரிவு அருகே ஆட்டோ மோதி படுகாயம் அடைந்தார்.

குடும்பத்தினர் அவரை மீட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சுகுமார் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 21-ம் தேதி உயிரிழந்தார்.

இந்த நிலையில் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் சுகுமார் 443 மதிப்பெண்கள் (74 சதவீதம்) பெற்றுள்ளார்.

சிறு வயது முதலே கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆக வேண்டும் என்ற கனவில் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், சாலை விபத்தில் மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News