மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
- மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதன்மூலம் நிலத்தடி நீர் குறைந்து, பொதுமக்கள் தண்ணீருக்கு அல்லல்பட வேண்டிய அவல நிலையும் உருவாகும்.
- மணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மணல் கடத்தல் நடைபெறுவதும், இதன்மூலம் படுகொலைகள் நடப்பதும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. மணல் கொள்ளையில் ஈடுபடுவோரை தி.மு.க. அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்காமல், அவர்கள்மீது மென்மையான போக்கினை கடைபிடித்து வருவதுதான் இதுபோன்ற கொலைகள் அதிகரிக்க வழிவகுக்குகிறது.
தி.மு.க. அரசு இதுபோன்ற மென்மையான போக்கினை கடைபிடிப்பதற்குக் காரணம், ஆளும் கட்சியைச் சார்ந்த முக்கியமான அரசியல் புள்ளிகள் மணல் கொள்ளையில் ஈடுபடுவதுதான் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதன்மூலம் நிலத்தடி நீர் குறைந்து, பொதுமக்கள் தண்ணீருக்கு அல்லல்பட வேண்டிய அவல நிலையும் உருவாகும்.
தமிழ்நாட்டில் நடைபெறும் மணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்து உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்தவும், கொலைகாரர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.