தமிழ்நாடு செய்திகள்

தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் ஒருபோதும் தனியார் மயமாகாது- அமைச்சர் சிவசங்கர் உறுதி

Published On 2025-04-12 12:03 IST   |   Update On 2025-04-12 12:03:00 IST
  • போக்குவரத்து கழக ஊழியர்கள், பொதுமக்கள் பஸ்சில் சந்தோஷமாக பயணம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
  • அரசு போக்குவரத்து கழகத்தில் 487 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

கோவை:

கோவை, சுங்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இன்று 13 புதிய அரசு பஸ்கள் தொடக்க விழா மற்றும் 41 போக்குவரத்து கழக ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.

விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கி, புதிய பஸ்களை தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் கூறியதாவது:-

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து கழக ஊழியர்கள், பொதுமக்கள் பஸ்சில் சந்தோஷமாக பயணம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறார்கள்.

பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கூட அவர்கள் கொண்டாட்டத்தை மறந்து பொதுமக்களுக்காக உழைத்து வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில், அரசு பஸ் மூலமாக சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. போக்குவரத்து கழக ஊழியர்களின் உழைப்பால் 19 விருதுகளை போக்குவரத்து கழகம் பெற்றுள்ளது.

இதற்கிடையே போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவார்கள் என்று சிலர் வதந்தியை பரப்பி வருகிறார்கள். அவ்வாறு ஒரு நாளும் நடைபெறாது. அரசு போக்குவரத்து கழகம் ஒரு போதும் தனியார் மயமாகாது.

அரசு போக்குவரத்து கழகத்தில் 487 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. 2000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.1000 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் போக்குவரத்து துறைக்கு ஒதுக்கப்படுகிறது. இதற்கு முன்பு பழைய பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது 11,000 புதிய பஸ்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் நலிவடைந்த நிலையில் இருந்த அரசு போக்குவரத்து கழகம் தற்போது இன்று புத்துயிர் பெற்று வருகிறது.

எனவே தனியார் மையம் என்ற தகவல் தவறானது. இப்போது அரசு போக்குவரத்து கழகத்தில் பெண்களும் நடத்துனர்களாக பணியில் செயல்பட்டு வருகிறார்கள்.

இதற்காக அவர்களுக்கு உயர பிரச்சனை காரணம் ஏற்பட்டபோது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு 10 சென்டிமீட்டர் உயரத்தை குறைத்து அவர்களும் பணியில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கினார்.

எனவே தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் பொதுத்துறை நிறுவனமாகவே தொடர்ந்து செயல்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் செல்வம், கலெக்டர் பவன் குமார், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாவட்ட தி.மு.க செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, ஏர்போர்ட் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News