தமிழ்நாடு செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி கார் மீது கல் வீசியவர் கைது

Published On 2025-05-15 14:53 IST   |   Update On 2025-05-15 14:53:00 IST
  • காரின் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியது.
  • தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் லட்சுமணன் புகார் அளித்தார்.

பெரியகுளம்:

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பெரியகுளம் முன்னாள் நகர் மன்ற தலைவர் ஆவார். இவர் தனது குடும்பத்தினருடன் பெரியகுளத்தில் இருந்து மதுரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை பெரியகுளத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 33) என்பவர் ஓட்டிச் சென்றார்.

வத்தலக்குண்டு சாலையில் தேவதானப்பட்டி அருகே வேல்நகரில் கார் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் அந்த கார் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் காரின் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதனையடுத்து லட்சுமணன் காரை நிறுத்தியபோது கற்களை வீசிய நபர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் லட்சுமணன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த பிரசாந்த் (30) என்பவர் தான் கல்வீசி தாக்கியது என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவருடன் இருந்த மற்றொரு நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News