விரைவில் நேரில் சந்திப்பேன்... கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசிய விஜய்
- 41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து விஜய் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.
- பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவியும் அறிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த 27-ந்தேதி கரூரில் பிரசாரம் செய்த போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக போலீசார் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப்திவு செய்துள்ளனர்.
இருவரும் முன் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த வாரம் விஜய் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவியும் அறிவித்தார். பலியானோர் குடும்பத்தை விரைவில் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல வருவதாகவும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விரைவில் நேரில் சந்திக்க இருக்கும் நிலையில் கடந்த 6-ந்தேதி மாலை 4.30 மணியளவில் பலியானோர் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்தார்.
கூட்ட நெரிசலில் பலியான தனுஷ்குமார் அம்மா, தங்கை ஹர்ஷினியுடன் வீடியோ காலில் பேசிய விஜய், "நடக்க கூடாத நிகழ்வு நடந்து விட்டது. எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பு. எப்போதும் உங்கள் குடும்பத்துக்கு துணை நிற்பேன். விரைவில் உங்களை சந்திப்பேன்" என தனுஷ்குமார் தாயார் மற்றும் உறவினர்களிடம் சுமார் 20 நிமிடங்கள் விஜய் பேசியுள்ளார்.
தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பலியானோர் குடும்பத்துடன் வீடியோ காலில் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் 2-வது நாளாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பேசியுள்ளார்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடுபத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய், விரைவில் நேரில் வந்து சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க காவல்துறை அனுமதி கிடைத்ததும் விரைவில் நேரில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.