தமிழ்நாடு செய்திகள்

சாதி தான் என்னுடைய முதல் எதிரி: கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு

Published On 2025-08-17 05:02 IST   |   Update On 2025-08-17 05:02:00 IST
  • பெண்களுக்கு உரிமைத்தொகை கொடுக்க வேண்டுமென முதலில் கூறியது எங்கள் கட்சி தான்.
  • சாதிதான் என்னுடைய முதல் எதிரி என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசியதாவது:

திருமாவளவனின் 40 ஆண்டு கால அரசியல் வாழ்வு சாதாரணமானது அல்ல. அதில் பல தழும்புகள் இருக்கிறது. சாதி பிரிவினைகள் தான் இந்தியாவின் பலவீனமாக உள்ளது. சாதியை நீக்கினால் தான் நாம் ஒரே தேசமாக, ஒரே மக்களாக இணைய முடியும். ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்மயப்படுத்துவது எளிதான காரியம் அல்ல.

அவர்களை அரசியல் மயப்படுத்தும் நபர்கள் அற்புதமானவர்கள். அவர்கள் அடிக்கடி வரமாட்டார்கள். அவர்கள் களத்திற்கு வரும்போது நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு கட்சியை ஆரம்பித்து அங்கீகாரம் வாங்குவது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு தெரியும். அரசியலில் அங்கீகாரம் பெறுவதே சிரமம்.

என்னுடைய சாதியை சொல்லி என்னை கிண்டல் செய்வார்கள். எனவே, சாதி தான் என்னுடைய முதல் எதிரி. என்னுடைய எதிரி யார் என்று கேட்பவர்களிடம் இதை தான் பதிலாக சொல்கிறேன். பிறப்பினால் நாம் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை. நம்மை விட உயர்ந்தவர் யாரும் இல்லை.

ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்தை பெண்களின் முன்னேற்றத்தை வைத்துத்தான் அளவிட முடியும் என அம்பேத்கர் கூறியுள்ளார். பெண்களுக்கு உரிமைத்தொகை கொடுக்க வேண்டுமென முதலில் கூறியது எங்கள் கட்சி தான் என தெரிவித்தார்.

Tags:    

Similar News