தமிழ்நாடு செய்திகள்

நவம்பரிலும் வாட்டும் வெப்பம்.. நாளை எப்படி? - வெதர்மேன் சொல்கிறார்!

Published On 2025-11-02 22:31 IST   |   Update On 2025-11-02 22:31:00 IST
  • சென்னையில் அதிகபட்சமாக 35.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.
  • மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பமான வானிலை காரணமாக நிகழும் அரிதான வெப்பச்சலன இடிமழை இருக்கும்.

வழக்கமாக வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்க வேண்டிய நவம்பர் மாதத் தொடக்கத்திலேயே, தமிழ்நாட்டில் வெப்பநிலை நேர்மாராக உயர்ந்து காணப்படுகிறது.

காற்றின் திசையில் ஏற்பட்ட மாற்றமே இந்த அதிக வெப்பத்திற்குக் காரணம் எனத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதத்தில் இந்த அளவு வெப்பம் நிலவியது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

இன்று (நவம்பர் 2) சென்னையில் அதிகபட்சமாக 35.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இது நவம்பரின் 2வது வெப்பமான நாளாகும். முன்னதாக நேற்று சென்னையில் 35.5 டிகிரி செல்சியல்ஸ் வெப்பம் பதிவானது. இன்று அதிகபட்சமாக மதுரையில் 37.4 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.

இதற்கிடையே நாளை தமிழகத்திற்கு மற்றொரு வெப்பமான நாள் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

கணிப்புப்படி, நவம்பர் 3 முதல் 6 ஆம் தேதி வரை மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட சில இடங்களில் ஆங்காங்கே மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பமான வானிலை காரணமாக  அரிதான வெப்பச்சலன இடிமழை பெய்யலாம்.

மற்ற இடங்களில் நாளை வறண்ட வானிலேயே காணப்படும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.   

Tags:    

Similar News