ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
- தனது அக்காள் சுபாஷினியுடனான காதலை கைவிடாததால் கவினை வெட்டிக்கொன்றதாக போலீசாரிடம் சுர்ஜித் தெரிவித்தார்.
- கவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்செல்வி. ஆசிரியை. இவர்களது மகன் கவின் செல்வ கணேஷ் (வயது 27). இவர் சென்னையில் ஐ.டி.ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 27-ந்தேதி தனது தாத்தாவை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது அதே பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன்-கிருஷ்ண குமாரி ஆகியோரின் மகன் சுர்ஜித் (24) என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்குப்பதிவு செய்தார். உதவி கமிஷனர் சுரேஷ் விசாரணை நடத்தியதில் தனது சகோதரி சுபாஷினியுடனான காதலை கைவிட வலியுறுத்தி அதனை கேட்காத காரணத்தினால் கவினை சுர்ஜித் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே கொலைக்கு தூண்டுதலாக சுர்ஜித்தின் பெற்றோர் செயல்பட்டதாகவும், அவர்களை கைது செய்யும் வரை கவின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர்கள் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினம் சரவணன் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கு குறித்த ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராஜ்குமார் நவ்ரோஜிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று முதலே சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
இதனிடையே கவினை காதலித்ததாகவும், அது தனது பெற்றோருக்கு தெரியாது எனவும் சுபாஷினி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் கவின் உடலை பெற்றுக்கொள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி., ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. என பல்வேறு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் கவின் பெற்றோரை சந்தித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், த.ம.மு.க. ஜான்பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் என பல்வேறு தரப்பினரும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் கவின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று காலை அவரது உடலை பெற்றுக்கொள்ள கவின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
அதன்படி கவினின் தந்தை சந்திரசேகர், சகோதரர் பிரவீன், தாய்மாமா இசக்கிமுத்து மற்றும் உறவினர்கள் பாளையங்கோட்டையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு இன்று காலையில் வந்தனர். அவர்களிடம் கவின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சரிபார்ப்பு, ஆவணங்கள் எழுதும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும், கவின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் முடிவடைந்த பின்னர் மேற்கொண்டு விசாரணைகள் தொடங்கும் எனவும் சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்தன.