தமிழ்நாடு செய்திகள்

ஆணவக்கொலை விவகாரம்: மீண்டும் ஒரு ஆணையம் அமைத்திருப்பது யாரை ஏமாற்ற?- அண்ணாமலை கேள்வி

Published On 2025-10-17 17:56 IST   |   Update On 2025-10-17 17:56:00 IST
  • 2021- 2023 வரை SC/ST மக்களுக்கெதிரான வன்முறை 68% அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
  • ஏற்கனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த முதலமைச்சர் தலைமையில் ஒரு குழு அறிவித்தார்கள்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களுக்கெதிரான வன்முறை, 2021ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரை, மூன்று ஆண்டுகளில் 68% அதிகரித்திருப்பதாக, சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்தது.

இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்காமல் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்காமல் அலைக்கழித்து வருகிறது திமுக அரசு.

இந்த நிலையில், ஜாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை நான்கு ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்திருப்பதாக, சட்டசபையில் தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

ஏற்கனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த முதலமைச்சர் தலைமையில் ஒரு குழு அறிவித்தார்கள். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டிய இந்தக்குழு, கடந்த நான்கு ஆண்டுகளில், வெறும் மூன்று முறையே கூடியிருக்கிறது. இந்தக் குழுவின் தலைவரான முதலமைச்சர் இது குறித்து ஏன் பேச மறுக்கிறார்?

இது தவிர, மாவட்ட ஆட்சியாளர் தலைமையிலான குழு, காவல்துறை ADGP தலைமையிலான சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குழு என, அனைத்துமே செயலற்று இருக்கையில், மீண்டும் ஒரு ஆணையம் அமைத்திருப்பது யாரை ஏமாற்ற?.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது திமுக அரசின் நோக்கமாகத் தெரியவில்லை. கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த எண்ணற்ற குழுக்களால் இதுவரை தமிழக மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News