நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை
- காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது.
- பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்ந்தனர்.
கர்நாடகா, தமிழக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு நேற்றுகாலை 12 ஆயிரம் கனஅடி யாக வந்தது.
மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது. இன்றுகாலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் அருவியில் குளிக்க மட்டும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
பின்னர் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்ந்தனர். மீன் சாப்பாடு வாங்கி கொண்டு குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.