தமிழ்நாடு செய்திகள்

வனத்துறையினருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்- ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு

Published On 2025-03-31 14:16 IST   |   Update On 2025-03-31 14:16:00 IST
  • ரப்பர் மரங்களை, டேவிட் தாஸ் வெட்டியபோது, வனத்துறையினர் அத்துமீறி நுழைந்து பிரச்சினை செய்துள்ளனர்.
  • வனத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை:

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பேச்சிப்பறை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் தாஸ். இவருக்கு களியல் வனச்சரகம் தொடலிக்காடு வனப்பகுதியை ஒட்டி கடையல் கிராமத்தில், இரண்டு ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்திற்கு அரசு உரிமை கோரியதால் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை தள்ளுபடி செய்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுடன் தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த ரப்பர் மரங்களை, டேவிட் தாஸ் வெட்டியபோது, வனத்துறையினர் அத்துமீறி நுழைந்து பிரச்சினை செய்துள்ளனர். இதனால் வனத்துறையினரை சிவில் சிறையில் அடைக்க வேண்டும் அல்லது வனத்துறைக்கு சொந்தமான வாகனம், களியல் வனச்சரக அலுவலகத்தின் கம்ப்யூட்டர், அலமாரி, மேசை உள்ளிட்ட அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டும் என குழித்துறை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் டேவிட் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் அதனை எதிர்த்து வனத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை அமர்வு நீதிபதி விஜயகுமார், வனத்துறையினருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், அந்த பணத்தை 12 வாரங்களுக்குள் டேவிட்தாஸிடம் வழங்கவும் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News