குற்றாலத்தில் மீண்டும் கனமழை: அருவிகளில் குளிக்க 6-வது நாளாக தடை
- நேற்று குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்தது.
- குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.
குற்றாலம்:
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு நேற்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டது. இதனால் காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நகர பகுதியிலும் மதியம் கனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 5 நாட்களாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்தது.
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.
இந்த நிலையில், பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று 6-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.