'பரிதாபங்கள்' கோபி, சுதாகருக்கு MR ராதா விருதும் போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கணும் - திவிக
- பரிதாபங்கள் சேனலில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' வீடியோ இணையத்தில் வைரலானது.
- 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது வழக்கறிஞர் தனுஷ்கோடி புகார் கொடுத்துள்ளார்.
யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி - சுதாகர். இவர்களின் பரிதாபங்கள் சேனலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
அண்மையில் பரிதாபங்கள் சேனலில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' வீடியோ இணையத்தில் வைரலானது. நெல்லை கவின் ஆணவக் கொலை தொடர்பாக இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவில் சாதிவெறிக்கு எதிராக நகைச்சுவையுடன் சமூக கருத்துக்களை பேசியிருந்தது அனைவரையும் ஈர்த்தது.
அதே சமயம் இந்த் வீடியோ டெலிட் ஆவதற்குள் பார்த்துவிடுங்கள் என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கினர். ஏற்கனவே திருப்பதி லட்டு தொடர்பான வீடியோ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றநிலையில், சில மணிநேரங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டது. பாஜக கொடுத்த அழுத்தத்தின் விளைவாக அந்த வீடியோ நீக்கப்பட்டது என்று கூறப்பட்டது.
இந்நிலையில், 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி இந்த புகாரை கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில், பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இரு சமூகத்தினர் இடையே பிரச்சினையை உருவாக்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளங்களை குறிப்பிட்டு அந்த சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்கள். அந்த வீடியோவை யூடியூப் தளத்தில் இருந்து நீக்க வேண்டும். பரிதாபங்கள் சேனலை தடை செய்யவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பரிதாபங்கள் கோபி - சுதாகருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திராவிடர் விடுதலை கழகத்தினர், " சவுத்ரி தேவர் என்பவர் கோபி சுதாகருக்கு மிரட்டல் எடுக்கும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி வெறி கும்பல்கள் கோபி, சுதாகரை மிரட்டி வருவதால் அவர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
மேலும், பெரியார் ,அண்ணா விருது போல் சமூக நலன் கொண்டு செயல்படும் கோபி - சுகாதருக்கு தமிழக அரசு எம்.ஆர்.ராதா விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என திராவிடர் விடுதலை கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.