சமையல் கியாஸ் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்- 6 மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
- 2025-30-ம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தில் பல்வேறு புதிய விதிமுறைகளை ஆயில் நிறுவனங்கள் அறிவித்தன.
- மீதமுள்ள 700 டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளன.
தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமாக சுமார் 5,500 சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வந்தன. இவை சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தன.
இதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் கோரப்பட்டு லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே அமலில் இருந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்தது. எனவே புதிய ஒப்பந்தத்துக்கு எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அந்த ஒப்பந்தத்தில் 21 டன் கியாஸ் ஏற்றும் 3 ஆக்சில் லாரிகளுக்கு முன்னுரிமை போன்ற விதிமுறைகள் இருந்தன. இந்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் செய்தனர். இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் சில நிபந்தனைகளை தளர்த்தின.
இதற்கிடையே 3,500 கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில் 2,800 கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே வேலைக்கான அனுமதி கடிதம் வழங்கி உள்ளன. மீதமுள்ள 700 டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக விவாதிக்க நேற்று நாமக்கல்லில் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2025-30-ம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தில் பல்வேறு புதிய விதிமுறைகளை ஆயில் நிறுவனங்கள் அறிவித்தன.
இந்த நிலையில் 3,500 டேங்கர் லாரிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில், 2,800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் அனுமதி கடிதம் வழங்கி உள்ளன. மீதமுள்ள டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
எனவே 2016-ம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட தகுதியான அனைத்து கியாஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று(நேற்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.
இதையொட்டி சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் கொண்டு செல்லும் பணி நிறுத்தி வைக்கப்படும். அடுத்த கட்டமாக கியாஸ் இறக்கும் பணியும் நிறுத்தப்படும். இந்த போராட்டத்தால் 6 மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும். ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டும் எண்ணெய் நிறுவனங்கள் அனைத்து லாரிகளுக்கும் வேலை கிடைக்கும் என்பதற்கான அங்கீகார கடிதத்தை வழங்க வேண்டும்.
அதுவரை தென் இந்தியா முழுவதும் உள்ள 5 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகளையும் ஓட்டாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம். தகுதியான அனைத்து கியாஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலைக்கான உத்தரவு வழங்கும் வரை காலவரையற்ற போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.