தமிழ்நாடு செய்திகள்

தோவாளை மலர்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு- மல்லிகை பூ கிலோ ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனை

Published On 2025-11-29 15:05 IST   |   Update On 2025-11-29 15:05:00 IST
  • பூக்களை தினமும் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் வந்து வாங்கிச் செல்கின்றனர்.
  • நாளை முகூர்த்த நாள் என்பதால் தோவாளை சந்தையில் பூக்கள் வாங்க இன்று ஏராளமானோர் குவிந்தனர்.

ஆரல்வாய்மொழி:

குமரி மாவட்டம் தோவாளையில் புகழ்பெற்ற மலர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு ஆரல்வாய்மொழி, குமாரபுரம், பழவூர், மாடநாடார் குடியிருப்பு, ஆவரைகுளம் பகுதிகளில் இருந்து பிச்சிப் பூவும், மதுரை, மானாமதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன்கோவில், கோவில்பட்டி, ராஜபாளையம் பகுதிகளில் இருந்து மல்லிகை பூவும் வருகின்றன.

பெங்களூரூ, ஓசூர், ராயக்கோட்டை பகுதிகளில் இருந்து மஞ்சள் கிரேந்தி, பட்டர் ரோஸ், சேலத்து அரளி போன்ற பூக்களும், நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி, அம்பை, தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி பகுதிகளில் இருந்து பச்சை, துளசி, மரிக்கொழுந்து போன்ற பூக்களும் விற்பனைக்கு வருகின்றன.

மேலும் ஆரல்வாய் மொழி, செண்பகராமன் புதூர், தோவாளை, ராமநாயக்கன் புதூர், தோப்பூர், குமாரபுரம் பகுதிகளில் இருந்து சம்பங்கி, அரளி, கோழிக்கொண்டை பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த பூக்களை தினமும் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

இந்த சந்தையில் பண்டிகை மற்றும் முகூர்த்த நேரங்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். அதன்படி நாளை (30-ந் தேதி) முகூர்த்த நாள் என்பதால், தோவாளை சந்தையில் பூக்கள் வாங்க இன்று ஏராளமானோர் குவிந்தனர். இதன் காரணமாகவும், வரத்து குறைவு காரணமாகவும் பூக்களின் விலை இன்று அதிகரித்து காணப்பட்டது.

ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.5 ஆயிரத்துக்கும், பிச்சிப்பூ ரூ.2 ஆயிரத்துக்கும் விற்பனையானது. அரளி பூ ரூ.200, சம்பங்கி ரூ.400, மஞ்சள் கிரேந்தி ரூ.80, சிகப்பு கிரேந்தி ரூ.90, பட்டர் ரோஸ் ரூ.240, ரோஜா ஒரு பாக்கெட் ரூ.40-க்கு விற்கப்பட்டது.

கனகாம்பரம் கிலோ ரூ.400, முல்லைப்பூ ரூ.1500, தாமரை ரூ.20, கோழிக்கொண்டை ரூ.80, துளசி ரூ.40, பச்சை ரூ.10, மரிக்கொழுந்து ரூ.140. 

Tags:    

Similar News