குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
- குற்றாலத்தில் நேற்று பகலில் சாரல்மழை விட்டு விட்டு பெய்ததால் குளுமையான சூழல் நிலவியது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
குற்றாலத்தில் நேற்று பகலில் சாரல்மழை விட்டு விட்டு பெய்ததால் குளுமையான சூழல் நிலவியது. மாலையில் கனமழை பெய்தது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காலை முதல் மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் அதிகளவில் கொட்டி வருகிறது. இதனால் இன்றும் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.