சரக்கு ரெயிலில் தீ விபத்து - சென்ட்ரலில் அவசர உதவி மையம் அமைப்பு
- சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மாவட்ட ஆட்சியர் பிரதாப், எஸ்.பி. சீனிவாச பெருமாளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் ஆய்வு செய்தார். சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் அருகே உள்ள பொதுக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு யாரும் வரவேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. சீனிவாச பெருமாளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்து கொண்டிருந்த அதிவிரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் அருகே சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சென்னை சென்ட்ரலில் அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே சரக்கு ரெயில் 2 மணி நேரத்திற்கு மேலாக தீப்பற்றி எரிந்து வரும் நிலையில் தீயணைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.