அரசு மருத்துவமனையில் நடமாடிய போலி மருத்துவர் - நோயாளி நகை, செல்போன் கொள்ளை
- மர்ம நபர் தன்னை மருத்துவர் என கூறிக்கொண்டு நோயாளிகளை பரிசோதித்துள்ளார்.
- மருத்துவமனையில் விசாரித்தபோது சம்பந்தப்பட்ட நபர் போலி மருத்துவர் என்பது அம்பலமானது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் என கூறிக்கொண்டு மர்ம நபர் ஒருவர் நோயாளியிடம் இருந்து நகை, செல்போனை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போலவே உடை அணிந்து கொண்டு மர்ம நபர் ஒருவர் ஒவ்வொரு நோயாளியிடமும் கேஸ் ஷீட்டுகளை சரி பார்த்துள்ளார்.
கடந்த 6-ந்தேதி அந்த மர்ம நபர் தன்னை மருத்துவர் என கூறிக்கொண்டு நோயாளிகளை பரிசோதித்துள்ளார். காப்பீடு திட்டம் இருக்கிறதா என கேட்டுவிட்டு மின்னஞ்சலையும் அவர் கொடுத்துள்ளார்.
நோயாளி ஒருவரை ஸ்கேன் எடுக்க அழைத்து சென்ற அவர், ஸ்கேன் எடுக்கும்போது நகை போடக்கூடாது எனக்கூறி நகைகளை வாங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து மருத்துவமனையில் விசாரித்தபோது சம்பந்தப்பட்ட நபர் போலி மருத்துவர் என்பது அம்பலமானது.
இதையடுத்து நகை திருட்டு தொடர்பாக நோயாளி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரில், 3 சவரன் தங்க நகை மற்றும் செல்போனை மருத்துவர் என கூறிக்கொண்டு வந்தவர் திருடி சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
மர்மநபர் ஒருவர் மருத்துவரை போன்று அரசு மருத்துவமனையில் வலம் வந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.