பொறியியல் கலந்தாய்வு ஜூலை 14-ந்தேதி தொடக்கம் - அமைச்சர் கோவி.செழியன்
- பொதுப் பிரிவுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் காஞ்சிபுரம் மாணவி சகஸ்ரா முதலிடம் வகித்துள்ளார்.
- பொதுப் பிரிவில் முதல் 10 இடங்களில் 7 மாணவிகளும், 3 மாணவர்களும் இடம் பிடித்துள்ளனர்.
என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்வதற்கான தர வரிசை பட்டியல் சென்னை கிண்டியில் உள்ள தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தில் இன்று வெளியிடப்பட்டது. இதனை உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 2374. அதில் பதிவு கட்டணம் செலுத்திய மாணவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 298. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 40,645 அதிகமாகும்.
200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவர்களின் எண்ணிக்கை 144. அதில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் 139 பேர். பிற வாரியத்தின் கீழ் படித்த மாணவர்கள் எண்ணிக்கை 5 மாணவ மாணவிகள் தங்களது தரவரிசை எண்ணை www.tneaonline.org என்ற இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். தரவரிசை பட்டியலில் மாணவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வேறு குறைகள் இருந்தலோ இன்று முதல் ஐந்து நாட்களுக்குள் (ஜூலை 2) தங்கள் அருகாமையில் உள்ள பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையத்தினை அணுகி தங்கள் குறைகளை பதிவு செய்து கொள்ளலாம்.
பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 41 ஆயிரத்து 641. சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஜூலை 7-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 14-ந் தேதி முதல் ஆகஸ்ட் 19-ந் தேதி வரை நடக்கிறது. துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
பொதுப் பிரிவுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் காஞ்சிபுரம் மாணவி சகஸ்ரா முதலிடம் வகித்துள்ளார். அவரைத் தொடர்ந்து நாமக்கல் மாணவி கார்த்திகா 2-வது இடமும், அரியலூர் மாணவர் அமலன் ஆண்டோ 3-வது இடமும், தாராபுரம் மாணவர் கிருஷ்ணப்பிரியன் 4-வது இடமும் பிடித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் ஜி.தீபா, ஜே.தீபிகா 5-வது மற்றும் 6-வது இடங்களையும், திருப்பூர் மாணவர் விஷால் ராம் 7-வது இடத்தையும், திண்டுக்கல் மாணவி பவித்ரா 8-வது இடமும், திருப்பூர் மாணவிகள் சுப ஸ்ரீ மற்றும் கோதை காமாட்சி ஆகியோர் 9-வது மற்றும் 10-வது இடங்களை பெற்றுள்ளனர்.
இதே போல அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் கடலூர் மாணவி தரணி 200க்கு 200 கட் ஆப் பெற்று முதலிடமும் சென்னை மாணவி மைதிலி 2-வது இடமும், கடலூர் மாணவர் முரளிதரன் 3-வது இடமும், திருவண்ணாமலை மாணவர் வெற்றிவேல் 4-வது இடமும், திருவண்ணாமலை மாணவி பச்சையம்மாள் 5-வது இடமும் பெற்றுள்ளனர்.
கடலூர் மாணவி அக்ஷயா 6-வது இடமும், செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம் மாணவர் நித்திஷ் 7-வது இடமும், சேலம் மாணவர் ரோஹித் 8-வது இடமும், நாமக்கல் மாணவி ஹரிணி 9-வது இடமும், திருவண்ணாமலை மாணவர் பிரவீன் 10-வது இடமும் வகித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுப் பிரிவில் முதல் 10 இடங்களில் 7 மாணவிகளும், 3 மாணவர்களும் இடம் பிடித்துள்ளனர். பொதுப்பிரிவு கலந்தாய்வு மூன்று சுற்றுகளாக நடைபெறுகிறது. முதல் சுற்று 200 கட் ஆப் மார்க்கில் இருந்து 179 மதிப்பெண் வரை நடக்கிறது.
அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் 47,372 பேர் தகுதி உடையவர்கள். 22 619 பேர் ஆண்களும் 24 752 பெண்களும் ஒரு மூன்றாம் பாலினத்தவரும் இடம் பெற்றுள்ளனர்.
மாணவர்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் செயல்பட்டு வரும் அழைப்பு மையத்தினை தொலைபேசி 18004250110 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
தரவரிசை பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை செயலாளர் சங்கர், தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் இன்னசென்ட் திவ்யா, மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.