'கபட நாடகம் ஆடும் திமுக' - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிக்கு ஆதரவாக பதிவிட்ட இபிஎஸ்!
- கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் திமுக
- தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த மு.க.ஸ்டாலின் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்
ஆண்டுதோறும் இயல்பாக நடைபெற்று வந்த 'கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு' இந்தாண்டு திருவண்ணாமலையில் சுமூகமாக நடைபெற்ற நிலையில், திருப்பரங்குன்றத்தில் பெரும் கலவரமாக வெடித்துள்ளது. நேற்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாத நிலையில், இன்று மீண்டும், தீபத்தூணியில் தீபம் ஏற்றவேண்டும் என்ற அதே உத்தரவை பிறப்பித்துள்ளார் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்.
இதனால் தற்போதும் திருப்பரங்குன்றத்தில் பதற்றநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் திமுக கபட நாடகம் ஆடுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
'எம்மதமும் சம்மதம்' - எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த மு.க.ஸ்டாலின் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். " என குறிப்பிட்டுள்ளார்.