தமிழ்நாடு செய்திகள்

இ.பி.எஸ். கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பணம் விநியோகம்? இணையத்தில் வலம் வரும் காட்சிகள்

Published On 2025-07-25 11:44 IST   |   Update On 2025-07-25 11:44:00 IST
  • கடந்த 7-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
  • கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார்.

புதுக்கோட்டை:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போதே தயாராகிவிட்டன. அந்த வகையில் எதிர்கட்சியான அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கவும், வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக களப்பணியை தற்போதே தொடங்கி விட்டனர். அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் கடந்த 7-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

முதற்கட்ட சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டத்தில் இருந்து தொடங்கி தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிறைவு செய்தாா். தொடர்ந்து 2-வது கட்ட சுற்றுப்பயணத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து நேற்று தொடங்கினார். அவர் கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார்.

நேற்று கந்தர்வகோட்டை தொகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேசினார். அப்போது ஏராளமான பொதுமக்கள் குவிந்து இருந்தனர்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்திற்கு சென்றவர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கட்டுக்கட்டாக பணம் விநியோகம் செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Tags:    

Similar News