கரூர் துயர சம்பவம்: அடையாளம் காணப்பட்ட 35 பேரின் உடல்கள் உறவினரிடம் ஒப்படைப்பு
- கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன.
- மீதமுள்ள 4 பேரின் உடல்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கரூர்:
கரூரில் வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று பிரசாரம் செய்தார். விஜய் பேசி முடித்து புறப்பட்டபின், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 28 பேர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ள 4 பேரின் உடல்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 50 பேரும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 61 பேரும் என மொத்தம் 111 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 17 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தோர் உடலுக்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட 35 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் தங்கள் உறவினர்களை ஆம்புலன்சில் ஏற்றிச் சென்றனர். உயிரிழந்தோர் உடல்களைப் பெறும்போது உறவினர்கள் கதறி அழுதது உருக்கத்தை ஏற்படுத்தியது.