மின்சாரம் தாக்கி தொழிலாளர்கள் உயிரிழப்பு: டிஜிபி-க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
- இருவரும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறினார்கள்.
- உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் மின் ஊழியர்கள் 2 பேர் பலியானது சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருச்சி கே.கே.நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்த கல்லுப்பட்டியை சேர்ந்த கலாமணி(45), அதே பகுதி அருணா பட்டியை சேர்ந்த மாணிக்கம்(32) 2 பேரும், கடந்த 18-ந்தேதி பெட்ரோல் பங்குக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இருவரும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறினார்கள். அப்போது மின்சாரத்தை சரியாக ஆப் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.
2 பேரும் கம்பத்தில் ஏறியதும் அவர்கள் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் கலாமணி மின் கம்பத்திலேயே உடல் கருகி பலியானார்.
மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் மின் ஊழியர்கள் 2 பேர் பலியானது சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் பலியான விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தியது.
இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் பலியான விவகாரத்தில் 2 வார காலத்தில் பதில் அளிக்குமாறு டிஜிபிக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.