தமிழ்நாடு செய்திகள்

அரசு பஸ்சின் அச்சு முறிந்து சக்கரங்கள் தனியாக கழன்று சாலையில் நிற்பதை காணலாம்.

அரசு பஸ்சின் அச்சு முறிந்து சாலையில் ஓடிய சக்கரங்கள் - 3 மாணவர்கள் படுகாயம்

Published On 2025-06-20 12:00 IST   |   Update On 2025-06-20 12:00:00 IST
  • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்சின் பின் பக்கத்தில் உள்ள 2 சக்கரங்களும் தனியாக கழன்று சாலையில் ஓடியது.
  • இந்த சம்பவத்தின்போது பின்னால் வேறு பஸ்கள் வராததால் அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

கடையநல்லூர்:

மதுரையில் இருந்து குற்றாலம் நோக்கி இன்று காலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த சங்கரன் (வயது 55) என்பவர் ஓட்டி சென்றார்.

பஸ் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் உள்ள மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலை சென்றபோது திடீரென பஸ் சக்கரத்தின் அச்சு முறிந்தது.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்சின் பின் பக்கத்தில் உள்ள 2 சக்கரங்களும் தனியாக கழன்று சாலையில் ஓடியது. எனவே பஸ்சின் பின்பக்கம் அமர்ந்திருந்த 3 மாணவர்கள் உள்பட பஸ்சில் இருந்த 40 பயணிகளும் பஸ்சின் உள்ளே தூக்கி வீசப்பட்டனர். இதில் பின்பகுதியில் இருந்த 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மற்ற பயணிகள் பாதுகாப்பாக மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தின்போது பின்னால் வேறு பஸ்கள் வராததால் அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்க்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ்சின் சக்கரம் கழன்று சாலையில் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News