புரட்சி பாரதம் தலைவர் ஜெகன்மூர்த்தியை கைது செய்ய முயற்சி - இ.பி.எஸ். கண்டனம்
- பட்டியலின மக்களின் குரலாக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஒலிப்பவர் ஜெகன்மூர்த்தி
- அஇஅதிமுக எப்போழுதும், எந்தக் குற்றத்தையும் ஆதரிக்கப் போவதில்லை.
கே.வி. குப்பம் எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தியின் வீடு பூந்தமல்லியில் உள்ளது. இன்று மதியம் திருவள்ளூர் டி.எஸ்.பி. தமிழரசி தலைமையில் போலீசார் ஜெகன் மூர்த்தி வீட்டிற்கு சென்றனர். இந்த தகவல் அறிந்து புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டின் முன் குவிந்தனர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஆள் கடத்தல் வழக்கில் கே.வி. குப்பம் எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தியை கைது செய்ய பூந்தமல்லியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டனர். அவரை கைது செய்து அழைத்துச் செல்ல முடியாத வகையில் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெகன் மூர்த்தியை போலீசார் கைது செய்ய முயற்சித்தற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், KV குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் ஜெகன்மூர்த்தி அவர்களை ஸ்டாலின் மாடல் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அராஜகப் போக்கைக் கையாண்டு கைது செய்ய முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனம்.
அஇஅதிமுக எப்போழுதும், எந்தக் குற்றத்தையும் ஆதரிக்கப் போவதில்லை. ஆனால் மதுரை, வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தையே பாதுகாக்க திராணியற்ற இந்த பொம்மை முதலமைச்சர், எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவதற்காக மட்டும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட Battalion-ஐ ஏன் அனுப்ப வேண்டும் ?
பட்டியலின மக்களின் குரலாக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஒலிக்கும் திரு. ஜெகன்மூர்த்தி அவர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என்பது, நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் அஇஅதிமுக கூட்டணியைக் கண்டு ஆளும் திமுக அரசு பயந்து வருவதையே காட்டுகிறது.
இப்படிப்பட்ட கைது முயற்சிகளால் அஇஅதிமுக கூட்டணி கட்சிகளை மிரட்டி, தங்கள் வழிக்கு கொண்டு வரலாம் என்று பகல்கனவு காணும் தீயசக்தி திமுக-வின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது!
ஆட்சி, அதிகாரம் என்பது மக்களுக்கு நன்மை செய்ய மட்டும் தான் இருக்கிறதே தவிர, எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயல்வதற்கு அல்ல என்பதை திரு. மு.க.ஸ்டாலின் உணரவேண்டும்.
இந்த கொடுங்கோன்மைக்கெல்லாம் உரிய பதிலை தமிழ்நாட்டு மக்கள் 2026-ல் திமுக-விற்கு நிச்சயமாக தருவார்கள்!