தமிழகத்தில் இனி ஆன்மீக ஆட்சிதான் அமையும் - அண்ணாமலை
- நம்முடைய ஆன்மீகத்தை விரிவாக பார்க்கக் கூடிய மனப்பக்குவம் நமக்கு கிடைக்கிறது.
- கோவிலை சார்ந்த ஆட்சியாகத்தான் அமையும்.
கோவை:
கோவை சூலூர் அருகே உள்ள காமாட்சிபுரி ஆதீனம், 51 சக்தி பீடத்தில் நடந்த குருபவுர்ணமி விழாவில் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
ஜூலை-ஆகஸ்டு மாதத்தில் வரக்கூடிய குருபவுர்ணமி அன்று வட இந்தியாவில் இரவு குறைவாகவும், பகல் அதிகமாகவும் இருக்கும். இயற்கையாகவே இந்த குருபவுர்ணமி ஒரு விசேஷமான நாள்தான். இந்த நாளுக்கு பிறகு நிறைய மாற்றங்கள் நடக்கும்.
எனவே இந்த நாளில் குருவிடம் அருளாசி பெறும்போது இன்னும் நல்ல மனிதர்களாக, நம்முடைய ஆன்மீகத்தை விரிவாக பார்க்கக் கூடிய மனப்பக்குவம் நமக்கு கிடைக்கிறது.
மிக மிக குறைவாக மூச்சு விடுகின்ற ஆமைக்கு ஆயுள் அதிகம். பிராண ரகசியத்தை யார் உணர்ந்து கொள்கிறார்களோ, அவர்களுக்கு ஆயுள் அதிகம் என்பதை மிகத்தெளிவாக, ஆமை போன்ற ஜீவராசிகளை பார்க்கும்போது நமக்கு தெரியும்.
இந்நாட்டில் ராஜா, முதலமைச்சர் என யாராக இருந்தாலும் சன்னியாசிகள் முன் என்று தரையில் அமர ஆரம்பிக்கிறார்களோ, அன்று தான் உண்மையான ஆன்மீக ஆட்சி வந்து விட்டது எனலாம்.
தமிழகத்தில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும், அது ஆன்மீக ஆட்சியாகத்தான் இருக்கும். கோவிலை சார்ந்த ஆட்சியாகத்தான் அமையும். இது நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன் சனாதன தர்மம் காக்க சன்னியாசிகள் உடன் பயணிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.