தமிழ்நாடு செய்திகள்

அதிகாரத்துக்கு வர வேண்டும் என அனைத்து கட்சியினருக்கும் ஆசை உண்டு- கார்த்தி சிதம்பரம்

Published On 2025-05-20 17:30 IST   |   Update On 2025-05-20 17:30:00 IST
  • தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலவத்தை பொறுத்தவரை தி.மு.க கூட்டணி வலுவாக உள்ளது.
  • தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உள்ளது.

கோவை:

கோவையில் கார்த்தி சிதம்பரம் எம்பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வலுவாக உள்ளது. தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலவத்தை பொறுத்தவரை தி.மு.க கூட்டணி வலுவாக உள்ளது.

எதிர் முகாமில் உள்ள அ.தி.மு.க கட்சி பெரிய வாக்கு வங்கி வைத்துள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து இருப்பதை அ.தி.மு.க.வின் கடைமட்ட தொண்டர்கள் விரும்பவில்லை.

பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி வேண்டாம் என்று கூறி விட்டு, ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் இப்போது மீண்டும் கூட்டணி வைத்தது ஏன் என அவர்கள் கேட்கின்றனர். எனவே அந்த கூட்டணியை வெல்லும் கூட்டணி என சொல்ல முடியாது.

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் தேர்தலில் எந்த அளவு வாக்கு பெறும் என்று தெரியவில்லை. அவர்கள் தனித்து நிற்பார்களா? அவர்கள் முடிவு என்ன என்று தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆங்காங்கே சுவரொட்டி ஒட்டுவதில் தவறில்லை. அனைத்து கட்சிகளுக்குமே அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியோருக்கும் அந்த ஆசை இருக்கும்.

தமிழகத்தில் 1967-க்கு பிறகு காங்கிரஸ் கட்சி அவ்வாறு இல்லை. இதில் எனக்கு வருத்தம் தான். தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க பெறக்கூடிய தொகுதிகளை வைத்து, காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிட கேட்டு பெறுமா என்று கூற முடியாது. கூட்டணி தர்மம் என்று உள்ளது.

ஆளும் கட்சியாகவும் இல்லாமல் எதிர்க்கட்சியாகவும் இல்லாமல் இருப்பதால் காங்கிரஸிற்கு ஒரு தர்ம சங்கடமான நிலை உள்ளது.

தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உள்ளது.

முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரத்தின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அவர் பா.ஜ.க. கட்சி வலிமையாக உள்ளது. தேர்தலில் அவர்களை எதிர் கொள்வதற்கு இந்தியா கூட்டணியில் வலிமை தேவை என்ற அர்த்தத்தில் தான் பேசியுள்ளார்.

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியை நாங்கள் வரவேற்கிறோம்.

அதே நேரத்தில் பல கேள்விகள் உள்ளன. அங்கே பாதுகாப்பு இல்லாதது குறித்தும், பாதுகாப்பு குறைபாடு குறித்தும் கேள்விகள் இருக்கின்றன. எனவேதான் பாராளுமன்ற கூட்டத்தில் இதுகுறித்த விவாதத்தின் போது பிரதமர் மற்றும் ராணுவ மந்திரி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளோம்.

தமிழக கவர்னர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு ஜனாதிபதி கடிதம் அனுப்பியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு பதிலளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இந்த பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் பிற மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதி எடுத்திருக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில பொதுச் செயலாளர் சரவணகுமார், தேசிய ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் கோவை ஹரிஹரன், முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி, ஐ என்.டி எஸ். சி மாவட்ட பொறுப்பாளர் கோவை செல்வம், ராஜாமணி, சோபனா செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News