தமிழ்நாடு செய்திகள்

அரக்கோணம் மாணவிக்கு நீதி வழங்க கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2025-05-21 13:22 IST   |   Update On 2025-05-21 13:22:00 IST
  • மேடை மற்றும் ஒலிபெருக்கி வசதி செய்யப்படவில்லை.
  • சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் அரக்கோணம் அடுத்த காவனூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தெய்வசெயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். பின்னர் தன்னை முக்கிய பிரமுகர்களுக்கு இறையாக்க முயற்சி மேற்கொண்டார். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன் என புகார் மனுவில் கூறி இருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் இன்று காலை அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலாளர் சு.ரவி எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் வளர்மதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தமிழகத்தில் தி.மு.க. வினர் தொடர்ந்து அராஜக போக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரக்கோணத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத அரக்கோணம் டி.எஸ்.பி.யை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேடை மற்றும் ஒலிபெருக்கி வசதி செய்யப்படவில்லை. சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News