விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் - இ.பி.எஸ். உத்தரவு
- ஆனந்தகுமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
- ஆனந்தகுமார் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை தலைவராக இருப்பவர் ஆனந்தகுமார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அன்பு அண்ணன், மக்கள் தளபதி விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என அவர் பதிவிட்டிருந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனிடையே ஆனந்தகுமாரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை தலைவர் ஆனந்தகுமார் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அவருடன் கட்சியினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.