தமிழ்நாடு செய்திகள்

ஆவணித்திருவிழா- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளை, பச்சை சாத்தி கோலத்தில் சப்பர பவனி

Published On 2025-08-21 11:48 IST   |   Update On 2025-08-21 11:48:00 IST
  • ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது.
  • சுவாமி சண்முகர் வள்ளி- தெய்வானையுடன் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

திருச்செந்தூர்:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது.

8-ம் திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

இன்று அதிகாலை சுவாமி சண்முகர் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 7.30 மணிக்கு சப்பரம் மேல் கோவில் வந்து சேரவேண்டும். ஆனால் இன்று காலதாமதமாக காலை 8.30 மணிக்கு சப்பரபவனி தொடங்கியது.

சுவாமி சண்முகர் வள்ளி- தெய்வானையுடன் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். தொடர்ந்து 11.30 மணிக்கு மேல கோவிலில் இருந்து சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7 மணியில் இருந்து 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News