தமிழ்நாடு

ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் சிக்கிய ரூ.1 கோடி யாருடையது? வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

Published On 2024-04-13 07:27 GMT   |   Update On 2024-04-13 07:27 GMT
  • வீட்டின் பூஜையறையில் டிராவல் பேக்கில் ரூ. 500 நோட்டுகள் கட்டு கட்டாக இருந்ததை கண்டனர்.
  • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒன்றரை மணி நேரமாக அந்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

திருச்சி:

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா அன்பரசுவின் கணவர் அன்பரசு தனது காரில் கட்டு கட்டாக பணம் கொண்டு செல்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஜீயபுரம் துணை போலீஸ் பிரண்டு பாலசந்தர் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் அந்தக் கார் எட்டறையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற அடுத்த சில நிமிடங்களில் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் பூஜையறையில் டிராவல் பேக்கில் ரூ. 500 நோட்டுகள் கட்டு கட்டாக இருந்ததை கண்டனர்.

உடனே இது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் 5 பேர் கொண்ட வருமானத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒன்றரை மணி நேரமாக அந்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இது ரூ.1 கோடி அளவுக்கு இருக்கும் என கூறப்பட்டது.

பின்னர் அந்த பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் அதன் பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா அன்பரசுவை விசாரணைக்காக அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டு முன்பும் விசாரணைக்கு அழைத்துச் சென்ற முசிறி காவல் நிலையம் முன்பும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அன்பரசு அ.தி.மு.க. பிரமுகர் ஆவார்.

Tags:    

Similar News