தமிழ்நாடு

சிதம்பரத்தில் லாரி மோதி சிறுமி பலி: தந்தை படுகாயம்

Published On 2023-12-13 05:13 GMT   |   Update On 2023-12-13 06:56 GMT
  • சிதம்பரம் அடுத்த மணலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஜனுஷ்கா 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
  • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிதம்பரம் தாலுக்கா போலீசார், மாணவி ஜனுஷ்காவின் உடலை மீட்டனர்.

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சொக்கலிங்க தெருவில் வசிப்பவர் ஜம்புலிங்கம். இவரது மகள் ஜனுஷ்கா (வயது 8). இவர் சிதம்பரம் அடுத்த மணலூரில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று அரையாண்டு தேர்வு தொடங்கியதால் தனது மகளை ஏற்றிக்கொண்டு ஜம்புலிங்கம் பள்ளியில் விட மோட்டார் சைக்கிளில் சென்றார். புறவழிச்சாலையில் மேம்பால பணிகள் நடைபெறுகிறது. இதனால் இந்த சாலையில் பள்ளம் மேடாக உள்ளது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து ஜம்புலிங்கம், அவரது மகள் ஜனுஷ்கா ஆகியோர் சாலையில் விழுந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த லாரி மாணவி ஜனுஷ்காவின் தலைமீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவி பலியானார். மேலும், ஜம்புலிங்கம் காலில் லாரி ஏறி இறங்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் கிடந்தார். அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிதம்பரம் தாலுக்கா போலீசார், மாணவி ஜனுஷ்காவின் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தையுடன் பள்ளிக்கு சென்ற மாணவி மீது லாரி ஏறி இறங்கியதால் தலை நசுங்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News