தமிழ்நாடு செய்திகள்

உழைக்கும் மக்களின் உரிமைப்போராளி..!- நல்லக்கண்ணு மறைவுக்கு ஆதவ் அர்ஜூனா இரங்கல்

Published On 2026-02-25 14:57 IST   |   Update On 2026-02-25 14:57:00 IST
  • வார்த்தைகளில் சொல்லமுடியாத அளவுக்கு மனவேதனை அடைந்திருக்கிறேன்.
  • அரசியல் களத்திற்கும், சமத்துவத்தைக் கனவு காணும் ஒவ்வொரு பட்டாளித் தோழனுக்கும் பேரிழப்பு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

நல்லக்கண்ணு மறைவுக்கு தாவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

விடுதலைப் போராட்ட வீரர்!

விவசாயிகளின் தோழர்!

உழைக்கும் மக்களின் உரிமைப் போராளி!

மாபெரும் தலைவர் - தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!

இந்திய விடுதலைப் போர் வீரராக பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்து, விவசாயத் தொழிலாளர்களுக்கான போராளியாக உருவெடுத்து, பாட்டாளிகளின் தோழராகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் - மாபெரும் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்திகேட்டு, வார்த்தைகளில் சொல்லமுடியாத அளவுக்கு மனவேதனை அடைந்திருக்கிறேன்.

'பொதுவாழ்வில் நேர்மை' என்பதற்கு தோழர் நல்லகண்ணு என்றே தமிழக அரசியல் களத்தில் பொருள்! அந்தளவுக்கு தன்னலமற்ற, போராட்டங்கள் சூழ்ந்த, தியாகங்கள் மிகுந்த பொது வாழ்வை வாழ்ந்துகாட்டியவர் அவர்! கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத அவருடைய தியாகப் பெருவாழ்வு, பொதுவாழ்வில் இருக்கும் அனைவருக்கும் நிகழ்காலப் பாடங்கள்!

தோழர் நல்லகண்ணுவின் இழப்பு தமிழக அரசியல் களத்திற்கு மட்டுமல்ல, இந்தியப் பொதுவுடமை அரசியல் களத்திற்கும், சமத்துவத்தைக் கனவு காணும் ஒவ்வொரு பட்டாளித் தோழனுக்கும் பேரிழப்பு! அவரை இழந்து வாடும் பொதுவுடமை இயக்கத் தோழர்களுடனும், அவருடைய குடும்பத்தினருடனும் என் ஆழ்ந்த வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

பொதுவாழ்வில் எவராலும் அழிக்க முடியாத தியாகத்தின் தடங்களை ஆழமாகப் பதித்துச் சென்றுள்ள பாட்டாளிகளின் தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு என் வீரவணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்!

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News