தமிழ்நாடு

தொடர் விடுமுறையால் மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு புராதன மையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

விடுமுறை தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-10-03 08:49 GMT   |   Update On 2022-10-03 08:49 GMT
  • ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறையின் காரணமாக மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
  • கடல் சீற்றம் அதிகமிருந்த போதிலும் அதை பற்றி யாரும் கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் கடலில் குளித்து மகிழ்ந்ததை காண முடிந்தது.

மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் அங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான வெளிநாடு, உள்நாடு பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுகிழமை மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறையின் காரணமாக நேற்று மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, கிருஷ்ண மண்டபம், மகிஷாசூரமர்த்தினி மண்டபம், பழைய கலங்கரை விளக்கம் உள்ளிட்ட புராதன பகுதிகள் பயணிகள் கூட்டத்தால் களைகட்டியது. பலர் புராதன சின்னங்கள் குடும்பம், குடும்பமாக நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

அதேபோல் மாமல்லபுரம் கடற்கரையிலும் இதமான சூழல், ரம்மியமான காற்று வீசியதால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் நேற்று திரண்டு வந்து பொழுதை கழித்தனர். கடல் சீற்றம் அதிகமிருந்த போதிலும் அதை பற்றி யாரும் கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் கடலில் குளித்து மகிழ்ந்ததை காண முடிந்தது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் நேற்று சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் உள்ள கிழக்கு ராஜ வீதி, கோவளம் சாலை, கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை, மேற்கு ராஜ வீதி போன்ற முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தினர். பிறகு நகருக்குள் சுற்றுலா பயணிகளுடன் வந்த கார், வேன், பஸ் போன்ற 800-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்று மாமல்லபுரம் நகரை விட்டு வெளியே சென்றன.

Tags:    

Similar News