தமிழ்நாடு செய்திகள்

ஜனாதிபதியின் உரை பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரமாக அமைந்துள்ளது: திருமாவளவன் கண்டனம்

Published On 2024-02-01 12:45 IST   |   Update On 2024-02-01 12:45:00 IST
  • பொய்கள் நிறைந்த பரப்புரையைக் குடியரசுத் தலைவரைப் படிக்கச் செய்ததன் மூலம் அவரை பாஜக அரசு அவமதித்து இருக்கிறது.
  • ஒட்டுமொத்தத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை ஏமாற்றம் அளிக்கும் வெற்று உரை.

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை எதிர்காலத்துக்கான எந்த ஒரு திட்டத்தைப் பற்றிய குறிப்பும் இல்லாமல் பா.ஜ.க.வின் தேர்தல் பரப்புரையாக அமைந்திருக்கிறது.

பொய்கள் நிறைந்த பரப்புரையைக் குடியரசுத் தலைவரைப் படிக்கச் செய்ததன் மூலம் அவரை பாஜக அரசு அவமதித்து இருக்கிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

வறுமை குறியீட்டில் முன்பு இருந்ததை விட இந்த ஆட்சியில் இந்தியா முன்னேறிவிட்டதாக இந்த அரசு சுய தம்பட்டம் அடிக்கிறது. ஆனால், 125 நாடுகளைக் கொண்ட பசியால் வாடுவோரின் அட்டவணையில் ( global hunger index) இந்தியா முன்பு இருந்ததைவிடக் கீழே இறங்கி 111 ஆவது இடத்தில் இருக்கிறது. அருகாமையில் உள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ் முதலான நாடுகளைவிடக் கீழே இந்தியா சென்றிருக்கிறது என்பது தலைகுனியச் செய்கிறது.

உண்மை நிலை இவ்வாறு இருக்க 'இந்த நான்கு தூண்களையும் அதிகாரப்படுத்துவதற்காக பாடுபடுகிறேன்' என்று இந்த பாஜக அரசு சொல்வது எந்த அளவுக்கு வடிகட்டிய பொய் என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும்.

ஒட்டுமொத்தத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை ஏமாற்றம் அளிக்கும் வெற்று உரை. குடியரசுத் தலைவரை அவமதிக்கும் உரை. இதை நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News